×

பெரியபாளையம் அருகே பஸ்சில் முட்டிமோதி ஏறும் மாணவிகள் விழுந்து காயம்

ஊத்துக்கோட்டை, பிப்.11:  பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் அடுத்த மதுரவாசல் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக்கிடக்கும் மாணவ, மாணவிகள் முட்டி மோதி ஏறும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர்.  படியில் தொங்கிபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் காலை, மாலை நேரத்தில் கன்னிகைபேர் வழியாக பெரியபாளையத்தில் இருந்தும், செங்குன்றத்தில் இருந்தும் கூடுதல் பஸ் இயக்கவும், அனைத்து அரசு, மாநகர பேருந்துகள் மதுரவாசல் நிறுத்தத்தில் நின்று செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராம எல்லையில்  அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கன்னிகைப்பேர், கன்னிகைப்பேர் காலனி, மஞ்சங்காரணை, தானாகுளம், மதுரவாசல்,  பனப்பாக்கம், ஜெயபுரம் ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து  6 முதல் 12ம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு வருவதற்கும், மாலை நேரத்தில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்வதற்கும் பெரியபாளையத்தி இருந்து செங்குன்றத்திற்கும், செங்குன்றத்தில் இருந்து பெரியபாளையத்திற்கும்  செல்லும் அரசு மற்றும் மாநகர பஸ்களில் பயணிக்கின்றனர். மாலையில் பள்ளி விட்டதும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு கன்னிகைப்பேர்  அரசு பள்ளி முன்பு  மதுரவாசல் பஸ் நிறுத்தத்துக்கு வருகின்றனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. மற்ற பஸ்கள் நிற்பதில்லை. அவ்வாறு நிறுத்தப்படும் பஸ்சில் மாணவ, மாணவிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். அப்போது மாணவிகள் நெரிசலில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர். பஸ்சுக்குள் கூட்டம் அதிகமாவதால் படிக்கட்டில் தொங்கியபடியும், கூரையில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

இது குறித்து பெற்றோர்கள்  கூறியதாவது: ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையத்தில் இருந்து வரும் அரசு மற்றும் மாநகர பஸ்கள் கன்னிகைப்பேர் மதுரவாசல் பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை.  அப்படி பஸ் நிறுத்தத்தில் நிற்கும் சில பஸ்களில் முண்டியடித்து ஏறுகின்றனர். நெரிசலில் சிக்கி திணறுகின்றனர். மாணவர்கள் பஸ் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தில் ெசங்குன்றம் மற்றும் பெரியபாளையத்தில் இருந்து கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Periyapayalam ,
× RELATED பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலை...